ஜூட் அன்ரனி ஜயமஹ வௌிநாடு செல்ல தடை

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட ஜூட் அன்ரனி ஜயமஹ வௌிநாடு செல்ல தடை

by Staff Writer 29-11-2019 | 4:00 PM
Colombo (News 1st) மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட ஜூட் ஷிரமந்த அன்ரனி ஜயமஹவிற்கு வௌிநாடு செல்ல உயர் நீதிமன்றத்தால் இன்று இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, விஜித் மலல்கொட, காமினி அமரசேகர ஆகியோரால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் ஊடக ஒன்றியத்தால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனிப்பட்ட ரீதியில் மனுவின் பிரதிவாதியாக பெயர் குறிப்பிட நீதியரசர்கள் குழாம் மனுதாரருக்கு அனுமதி வழங்கியுள்ளது. சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர், முன்னாள் நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், செயலாளர், கொலை செய்யப்பட்ட இளைஞரின் தாய், தந்தை ஆகியோர் சாட்சியாளர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.