மாதாந்தம் 2,50,000 ரூபாவிற்கும் அதிக வருமானம் பெறுவோருக்கு வருமான வரி

by Bella Dalima 28-11-2019 | 9:20 PM
Colombo (News 1st) இணை அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இன்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, நேற்று (27) அறிவிக்கப்பட்ட வரி திருத்தங்கள் தொடர்பில் மீண்டும் தௌிவுபடுத்தினார். இதன்போது அவர் இனிமேல் இலங்கையின் அரச துறை மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான PAYEE TAX எனும் வரி அறவிடப்பட மாட்டாது என குறிப்பிட்டார். 2,50,000 ரூபாவிற்கு மேல் வருமானம் பெறுபவர்கள் மாத்திரம் வருமான வரிக்குள் உள்வாங்கப்படுவார்கள் எனவும் முதலாவது பிரிவிற்கமைய அவர்களிடம் 6 வீதம் வரி அறவிடப்படும் எனவும் அதற்கு அதிகமாக 2,20,000 ரூபா பெறுவோரிடம் 12 வீதமும் அதிலிருந்து அடுத்த 2,50,000 ரூபா வரை பெறுவோரிடம் 18 வீதமும் அறவிடப்படும் என பந்துல குணவர்தன தௌிவுபடுத்தினார். நிலையான வைப்பீடுகள், சேமிப்பு கணக்குகள், சிறுவர் சேமிப்பு கணக்குகள் என்பவற்றுக்கான சேமிப்பு வரி முற்றாக இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக சிரேஷ்ட பிரஜைகள் எந்தவித வரிக்கும் உள்வாங்கப்பட மாட்டார்கள் எனவும் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார். 15 வீத VAT வரி, 2 வீத தேச நிர்மாண வரி ஆகிய இரண்டு வித வரிகளுக்கும் பதிலாக டிசம்பர் முதலாம் திகதியில் இருந்து 8 வீத VAT வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தகவல் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய அனைத்து வரிகளும் முற்றாக இரத்து செய்யப்பட்டுள்ளன. அடுத்த வருட ஆரம்பத்தில் இந்த வரி சலுகைகள் காரணமாக இலங்கையின் விவசாயத்துறை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன நம்பிக்கை வௌியிட்டார்.