சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரி தடுத்து வைக்கப்பட்டு விசாரணை: பூரண விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பிரதமர் தெரிவிப்பு

by Bella Dalima 28-11-2019 | 8:32 PM
Colombo (News 1st) சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரி ஒருவர் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைக்காவிட்டாலும் பூரண விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அருகிலுள்ள கண்காணிப்பு கமரா கட்சிகளைப் பரிசோதித்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவித்துள்ளதாகவும் தூதுவரையும் அவரின் உதவியாளரையும் பொலிஸ் மா அதிபரையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தாம் நேற்று சந்தித்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா செல்ல தயாராகும்போது வீதிகளில் பொருத்தப்பட்டிருந்த தமிழ் பெயர்கள் அகற்றப்பட்டிருந்ததாகவும் அச்செயலுக்கும் இதற்கும் தொடர்புள்ளதா என ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 25ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றவியல் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சுவிட்ஸர்லாந்திற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜேர்மனுக்கான இலங்கை தூதுவர் கருணாசேன ஹெட்டியாரச்சி, இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சுவிட்ஸர்லாந்து அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.