எதிர்க்கட்சி தலைவர் தொடர்பான சபாநாயகரின் அறிவிப்பு

எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் கலந்துரையாடி இறுதித் தீர்மானத்தை அறிவிக்குமாறு சபாநாயகர் கோரிக்கை

by Staff Writer 28-11-2019 | 6:28 PM
Colombo (News 1st) எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இறுதி இணக்கப்பாடு உத்தியோகப்பூர்வமாக தெரியப்படுத்தப்பட்டு, அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது அறிவிக்கப்பட்டதன் பின்னரே எதிர்க்கட்சித் தலைவர் பதவி நடைமுறைக்கு வரும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கக்கோரி, ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் 57 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடனான கடிதமொன்று நேற்று (27) மாலை தம்மிடம் கையளிக்கப்பட்டதாக அறிக்கையொன்றின் ஊடாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். குறித்த கடிதத்தின் பிரதியொன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருக்கு சபாநாயகர் அனுப்பியுள்ளார். 57 பேரின் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தி, எதிர்க்கட்சியில் இருக்கும் பிரதான அரசியல் கட்சி என்ற ரீதியில் தமது நிலைப்பாட்டை அறிவிக்குமாறும் சபாநாயகர், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருக்கு அறிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் இருவேறு மாறுபட்ட கருத்துக்கள் தற்போது நிலவுவதாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்துரையாடி, இறுதித் தீர்மானத்தை உத்தியோகப்பூர்வமாக தமக்கு அறிவிக்குமாறும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.