சட்டத்தை மீறிய 3 அரச அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

தேர்தல் சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் 3 அரச அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

by Staff Writer 27-11-2019 | 9:40 AM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் சட்டத்தை மீறியதாக 3 அரச உத்தியோகத்தர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் மீதான ஆரம்பகட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்பிரகாரம் பொது நிர்வாக அமைச்சின் தலையீட்டுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்ட ஏனைய அரச உத்தியோகத்தர்கள் இருவர் தொடர்பில் தகவல்கள் திரட்டப்படுகின்றன. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் அரச வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை குறித்து 4 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்த விடயம் குறித்து அரச உத்தியோகத்தர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் அந்தந்த நீதிவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறப்படுவதாகவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.