கருவாட்டிற்கு விலை நிர்ணயிக்குமாறு கோரிக்கை

கருவாட்டிற்கு விலை நிர்ணயிக்குமாறு கோரிக்கை

by Staff Writer 27-11-2019 | 4:37 PM
Colombo (News 1st) புத்தளம் - கல்பிட்டி பிரதேசம் சுற்றுலா, மீன்பிடி என பல்வேறு துறைகளால் பிரசித்தி பெற்று விளங்குகிறது. கல்பிட்டியில் உற்பத்தி செய்யப்படுகின்ற கருவாட்டிற்கும் அதிக கேள்வி நிலவுகின்றது. எனினும், இங்குள்ள கருவாட்டு உற்பத்தியாளர்கள் தற்போது பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். கல்பிட்டியில் கருவாட்டுத் தொழிலை மேற்கொள்ளும் தொழிலாளர்கள் மழை காலங்களில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமையால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதாக விசனம் வௌியிட்டுள்ளனர். கருவாட்டின் உற்பத்தி செலவு அதிகரிக்கும் போது எதிர்பார்த்த இலாபத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தாம் முகம் கொடுப்பதாகவும் கருவாட்டு உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டனர். கட்டுப்பாட்டு விலையின்றி கருவாடு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றமையால், கருவாட்டு தொழிலாளர்கள் மீனவர்களிடம் மீன்களை கொள்வனவு செய்வதில் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர். அரசாங்கத்தினால் தங்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படுவதில்லை எனவும் தமக்கான நிர்ணய விலையை உருவாக்கிக் கொடுக்குமாறும் கருவாட்டு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.