பல்கலைப் பிரச்சினைகளை முன்வைக்க ஒம்புட்ஸ்மன் குழு

பல்கலைக்கழகம் சார் பிரச்சினைகளை முன்வைக்க ஒம்புட்ஸ்மன் குழு நியமனம்

by Staff Writer 26-11-2019 | 11:19 AM
Colombo (News 1st) பல்கலைக்கழக செயற்பாடுகளைப் பாதிக்கும் விடயங்களை முன்வைப்பதற்காக ஒம்புட்ஸ்மன் (Ombudsman) குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், கல்விசாரா ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இந்தக் குழுவிடம் முன்வைக்க முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதனூடாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகள் குறைவடையக்கூடும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நியமிக்கப்படவுள்ள இந்த ஒம்புட்ஸ்மன் குழுவில், கலாநிதி உள்ளிட்ட புத்திஜீவிகள் நியமிக்கப்படவுள்ளதாக, உயர்கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பப் புத்தாக்க அமைச்சராக பதவியேற்றுள்ள பந்துல குணவர்தன கூறியுள்ளார். இதன்பிரகாரம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இயங்கவுள்ள இந்த ஒம்புட்ஸ்மன் குழுவிடம், அனைத்து சந்தர்ப்பங்களிலும் தமது பிரச்சினைகளை முன்வைக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முன்வைக்கப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகளுடனான பரிந்துரைகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த பின்னர், அவற்றை உடனடியாக நிவர்த்திப்பதற்கு இயலும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.