by Staff Writer 26-11-2019 | 7:31 AM
Colombo (News 1st) வறுமையை வென்று சாதித்த பலர் எம் மத்தியில் இருக்கவே செய்கின்றனர். அவ்வாறான ஒருவர் தொடர்பில் நாம் இன்று வெளிக்கொணர்கின்றோம்.
நுவரெலியா மாவட்டத்தின் பூண்டுலோயா சீன் கீழ்பிரிவைச் சேர்ந்த துரைசாமி விஜிந்த், வறுமையுடன் போராடி ஆசியாவை வெற்றிகொள்ளும் எதிர்ப்பார்ப்பில் காத்திருக்கும் மெய்வல்லுநர் வீரராவார்.
34 வயதான விஜிந்த் வலய, மாகாண மற்றும் தேசிய ரீதியிலான வேகநடைப் போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் பலவற்றை வென்று சாதித்துள்ளார்.
குடும்ப வறுமையின் காரணமாக தலைநகரில் தொழில் புரிந்தவாறு பல தேசியமட்ட போட்டிகளில் பங்குபற்றி அதில் பதக்கங்கள் பலவற்றையும் விஜிந்த் வென்றுள்ளார்.
எதிர்வரும் 2ஆம் திகதி மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசிய சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதியை விஜிந்த் பெற்றுள்ள போதிலும் அவரது பொருளாதார நிலைமை அதனை கேள்விக்குறியாக்கியுள்ளது.
சிறந்த பயிற்றுநர், உரிய மைதானம் உள்ளிட்ட பௌதீக வளங்கள் இல்லாத நிலையிலும் விஜிந்த் தேசியமட்ட வேகநடைப் போட்டிகளில் பிரகாசித்துள்ளமையானது அவரது திறமைக்கான அதிசிறந்த அடையாளமாகும்.
வறுமையையும் பொருட்படுத்தாது தேசிய அரங்கில் பிரகாசிக்கும் எதிர்பார்ப்பில் காத்திருக்கும் அவருக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியது எமது சமூகத்தின் பொறுப்பல்லவா?