சுற்றாடலைப் பாதுகாக்கும் செயற்றிட்டம்

சுற்றாடலைப் பாதுகாக்கும் செயற்றிட்டம்

by Staff Writer 24-11-2019 | 2:57 PM
Colombo (News 1st) பொலிஸ் பிராந்திய சுற்றாடல் பிரிவை மறுசீரமைத்து இன்று (24) தொடக்கம் நாடளாவிய ரீதியில் சுற்றாடலை பாதுகாக்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய இந்த செயற்றிட்ட மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்குடன் பொலிஸ் திணைக்களத்தினூடாக சுற்றாடல் பாதுகாக்கும் செயற்றிட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதற்கான பொலிஸ் பிரிவுகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு அது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படவுள்ளது. மேலும் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்களை தெளிவூட்டும் நடவடிக்கைகளும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, விபத்துக்களை குறைத்துக்கொள்ளும் நோக்குடன் மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள் ஆகியோரை தௌிவூட்டும் செயற்றிட்டமும் பொலிஸ் திணைக்களத்தினால் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.