இலஞ்ச குற்றச்சாட்டுகள் காரணமாக 42 பேர் கைது

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலஞ்ச குற்றச்சாட்டுகள் காரணமாக 42 பேர் கைது

by Staff Writer 23-11-2019 | 3:32 PM
Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலஞ்சம் பெற்றமை மற்றும் வழங்கியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 36 சுற்றிவளைப்புகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் அரச அதிகாரிகளுடன் சிவில் பிரஜைகளும் அடங்குவதாக அவர் கூறினார். இதனிடையே, சுமார் இரண்டு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற சிலாபம் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் நேற்று கைது செய்யப்பட்டார். கோவில் ஒன்றில் காணாமற்போன இரண்டு வலம்புரி சங்குகளை தேடிக்கொடுத்தல் மற்றும் ஆலயத்தின் பணிகளை எவ்வித சிக்கல்களும் இன்றி முன்னெடுப்பதற்கு உதவி பொலிஸ் அத்தியட்சகரால் இலஞ்சம் கோரப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்தது. குறித்த ஆலய வளாகத்தில் இலஞ்சம் பெற்ற போதே அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி குறிப்பிட்டார்.