சாதரண தர பரீட்சைக்காக 4,987 மத்திய நிலையங்கள்

க.பொ.த சாதரண தர பரீட்சைக்காக 4,987 மத்திய நிலையங்கள், 554 இணைப்பு நிலையங்கள்

by Staff Writer 22-11-2019 | 3:21 PM
Colombo (News 1st) கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்காக விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை அடுத்த மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம்முறை பரீட்சைக்காக விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், 4,987 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், 554 இணைப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இரத்மலானை, தங்காலை, மாத்தறை. சிலாபம், கொழும்பு மெகசின் சிறைச்சாலை, மகரகம அபேக்ஷா வைத்தியசாலை, வட்டரெக சனித்தா வித்தியாலயம், நேபாளம் காத்மண்டு நகரத்தில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம் ஆகிய இடங்களில் இந்த விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இம்முறை பரீட்சைக்கு 4,33,050 பாடசாலை பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2,83,958 தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சையில் தோற்றவுள்ளனர். இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் 7,17,008 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.