செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தால் டிமென்சியா ஏற்படும்

செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தால் டிமென்சியா எனும் மனநோய் ஏற்படக்கூடும்

by Bella Dalima 21-11-2019 | 4:32 PM
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்ந்தால் டிமென்சியா எனும் மனநோய் ஏற்படக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் முயற்சிகளை அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்காவை சேர்ந்த ரொக்கெட் தயாரிக்கும் தனியார் நிறுவனமான SpaceX நிறுவனர் எலோன் மஸ்க் செவ்வாய் கிரகத்தை வாழ்விடமாக்கும் திட்டங்கள் உள்ளதாக அறிவித்துள்ளார். செவ்வாய் கிரகத்தை சுற்றும் ரோவர் மூலம் பூச்சிகள் வாழ்வதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என அமெரிக்காவின் ஒஹாயோ பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பூச்சியியல் ஆய்வாளர்கள் சமீபத்தில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்ந்தால் படிப்படியாக சுயநினைவை இழந்து டிமென்சியா எனும் நாள்பட்ட மனநோய் ஏற்படலாம் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முற்பட்டால் முதல் பிரச்சினையாக இருப்பது சுகாதார குறைபாடுகள் தான். அவற்றில் மிக முக்கியமானது என்னவென்றால், உலோகம், பிளாஸ்டிக் மற்றும் மனிதத்தோல் வழியாக பயணிக்கும் திறன் கொண்ட அதிக அளவு கதிர்வீச்சு புற்றுநோயை ஏற்படுத்துவதுடன் கடுமையான அறிவாற்றல் குறைபாடுகளையும் ஏற்படுத்தும். புற்றுநோய்க்கு கதிர்வீச்சின் மூலம் சிகிச்சை பெறுபவர்களுக்கு இந்த டிமென்சியா நோய் பாதிப்பு இருப்பதாக அமெரிக்க மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. டிமென்சியா என்பது மூளை நோய்கள் அல்லது பிற காயத்தால் ஏற்படும் மன செயன்முறைகளின் நாள்பட்ட அல்லது தொடர்ச்சியான கோளாறு ஆகும். செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படலாம். அவர்களுக்கு இந்த செய்தி சாதகமானது அல்ல என கலிபோர்னியா மருத்துவ பல்கலைக்கழகத்தின் கதிர்வீச்சு புற்றுநோயியல் பேராசிரியர் கூறியுள்ளார்.