21ஆவது அகவையில் தடம் பதிக்கும் சக்தி FM

21ஆவது அகவையில் தடம் பதிக்கும் சக்தி FM

by Staff Writer 20-11-2019 | 7:48 AM
Colombo (News 1st) தமிழ்பேசும் மக்களின் சக்தியாக விளங்கும் சக்தி FM இன்று (20) தனது 21 ஆவது அகவையில் அகமகிழ்வுடன் காலடி எடுத்து வைக்கின்றது. வானொலி வரலாற்றில் மக்களோடு மக்களாக இணைந்து மகத்தான பல சாதனைகளைப் படைத்துவரும் பண்பலையாக சக்தி FM திகழ்கின்றது. எதிலும் புதுமை, எதிலும் முதன்மை என்பதற்கிணங்க மக்களின் நாடித்துடிப்பறிந்து தனது நிகழ்ச்சிகளை சிருஷ்டித்து வரும் சக்தி FM, புரிந்து வரும் புதுமைப் புரட்சிகளோ ஏராளம். 1998 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சக்தி FM, இன்று நாடளாவிய ரீதியிலும் இணையத்தளத்தின் ஊடாக உலகளாவிய ரீதியில் தேமதுரத் தமிழோசையாய் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இசை, சினிமா, நகைச்சுவை, கலை, கவித்துவம், உலக நடப்பு, பொது அறிவு, மருத்துவம், விளையாட்டு, விந்தைகள், விறுவிறுப்பு, ஜனரஞ்சகம் ஆகிய பல்சுவைகளையும் தன்னகத்தே கொண்ட சக்தி FM முத்தமிழையும் தனது நிகழ்ச்சிகளின் முத்தாய்ப்பாய் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வயது வேறுபாடின்றி அனைவரையும் தனது படைப்பாற்றலால் ஈர்த்துவரும் சக்தி FM இன் சாதனைப் பயணம் மென்மேலும் உத்வேகம் பெற நியூஸ்பெஸ்ட்டின் இதயபூர்வமான வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.