பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய ரணில் விக்ரமசிங்க தீர்மானம்

by Bella Dalima 20-11-2019 | 4:13 PM
Colombo (News 1st) பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். அது தொடர்பிலான அறிவிப்பை ரணில் விக்ரமசிங்க இன்று மாலை விடுத்தார். இதன்போது, கடந்த 5 வருடங்களாக நாட்டில் ஜனநாயகம், மனித உரிமைகள், கருத்து வௌியிடும் சுதந்திரம் , தகவல் அறியும் உரிமை, சமவுரிமை மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதி செய்வதற்காக தாம் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். நிலைபேறான அபிவிருத்திக்குள் நாட்டை கொண்டு சென்றதுடன், 19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக அனைத்து திணைக்களங்களையும் அரசியலில் இருந்து சுதந்திரமடையச் செய்ததன் காரணமாக கடந்த ஜனாதிபதித் தேர்தலை சுதந்திரமானதும் சுயாதீனம் மற்றும் நீதியான முறையிலும் முன்னெடுக்க முடிந்ததாக பிரதமர் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தின் பெரும்பான்மை தம்மிடம் காணப்பட்டாலும், கோட்டாபய ராஜபக்ஸவிற்கு கிடைத்த மக்கள் ஆணையை ஏற்று, அவருக்கு தேவையான வகையில் அரசாங்கத்தை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க தாம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். அதற்கமைய புதிய ஜனாதிபதி, புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு தேவையான வகையில் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.