by Staff Writer 20-11-2019 | 12:03 PM
Colombo (News 1st) அதிக விலைக்கு கோதுமை மாவை விற்பனை செய்த 27 வர்த்தகர்களுக்கு எதிரான வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடு முழுவதும் 50 இற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கோதுமை மாவை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அதிகார சபை கூறியுள்ளது.
கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு எந்தவொரு நிறுவனத்திற்கும் வர்த்தகர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் இரு சந்தர்ப்பங்களில் நிறுவனங்கள், கோதுமை மாவின் விலையை அதிகரித்ததுடன் அந்த சந்தர்ப்பங்களில் அதிக விலைக்கு கோதுமையை விற்பனை செய்த 400 இற்கும் அதிகமான வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தியவசிய பொருளான கோதுமை மாவின் விலை 87 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.