கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அரச தலைவர்கள் வாழ்த்து

கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அரச தலைவர்கள் வாழ்த்து

by Staff Writer 17-11-2019 | 8:02 PM
Colombo (News 1st) கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அரச தலைவர்கள் பலர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ட்விட்டர் ஊடாக தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இருநாட்டு ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் வலய பாதுகாப்பு தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஸவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்ரமணியம் சுவாமி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஸவிடம் தூரநோக்கு உள்ளதாக அவர் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த வெற்றி இந்தியாவிற்கு நன்மை பயக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாலைத்தீவுகள் மற்றும் இலங்கைக்கு இடையில் நீண்டகாலமாகவிருக்கும் உறவினை எதிர்காலத்தில் மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி தெரிவித்துள்ளார். தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு ட்விட்டர் ஊடாக வாழ்த்துக்களை தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமாகிய மொஹமட் நசீட், கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கிடையிலுள்ள உறவினை மேலும் வலுப்படுத்தி சிறந்த சமூகத்தினை உருவாக்குவதற்கு இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மக்களின் இறையாண்மையின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ஸவிற்கு பாகிஸ்தான் அரசாங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமைத்துவத்தின் கீழ், அமைதி மற்றும் சிறப்பான எதிர்கால பயணம் தொடர்பில் நம்பிக்கை வைக்க முடியும் என பாகிஸ்தான் அரசாங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்