தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவு

தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவு: புத்தளத்தில் பஸ்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்

by Bella Dalima 16-11-2019 | 7:16 PM
Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தலின் போது வன்முறைச் சம்பவங்கள் சில பதிவாகியுள்ளன. புத்தளத்திலிருந்து மன்னார் - சிலாவத்துறை நோக்கி மூன்று பஸ்களில் பயணித்த சிலர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்களிப்பதற்கு மக்கள் பயணித்த பஸ்கள் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். போகொட சப்பாத்து பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலை 12.20 அளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, பஸ் ஒன்றின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி சேதமாக்கப்பட்டுள்ளது. மற்றுமொரு பஸ்ஸின் பின்புறத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். துப்பாக்கி பிரயோகத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை,ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செங்கலடி - முறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்றுக்கு இனம் தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். தெரணியகல நூரி தோட்டம் - பஸ்னாகல வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்து திரும்பிக்கொண்டிருந்த இளைஞர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த 21 வயதுடைய இளைஞர் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது குறித்த பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பலாங்கொடை ஸ்ரீ அக்ரபோதி கல்லூரி மற்றும் பலாங்கொடை ரிகிலிய நாரத கல்லூரி ஆகிய வாக்களிப்பு நிலையங்களில் பொதுஜன பெரமுனவின் சின்னம் பொறிக்கப்பட்ட கையேடுகளை விநியோகித்த இருவரை பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களது மோட்டார் சைக்கிள் மற்றும் காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பலாங்கொடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.