சுமூகமான முறையில் இடம்பெற்ற வாக்களிப்பு

சுமூகமான முறையில் இடம்பெற்ற வாக்களிப்பு

by Bella Dalima 16-11-2019 | 5:15 PM
Colombo (News 1st) 2019 ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 5 மணியுடன் நிறைவடைந்துள்ளன. நாட்டின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் இன்று (16) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது. இந்தநிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பெறுபேறுகள் இன்றிரவு 10 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணிக்குள் வௌியிடப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்திருந்தார். ஏழாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக 12,845 மத்திய நிலையங்களில் இடம்பெற்ற வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று பிற்பகல் 5 மணியுடன் நிறைவடைந்தன. வாக்களிப்பு மத்திய நிலைய பொறுப்பதிகாரிகளால் வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். வாக்களிப்பு நடவடிக்கைகள் சுமூகமான முறையில் இடம்பெற்றதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது. இம்முறை தேர்தலில் 1,59,92,092 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதேவேளை, தபால் மூல வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் இன்று பிற்பகல் 5.15 அளவில் ஆரம்பமாகின. வாக்கெண்ணும் மத்திய நிலையங்களில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்றிரவு 10 மணி முதல் 12 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் முதலாவது தேர்தல் முடிவை அறிவிக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.