ஆசியாவின் 10 நகரங்கள் காற்று மாசினால் பாதிப்பு

ஆசியாவின் 10 நகரங்கள் காற்று மாசினால் அதிகளவில் பாதிப்பு

by Staff Writer 16-11-2019 | 1:20 PM
Colombo (News 1st) உலகில் காற்று மாசினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட 10 நகரங்களும் ஆசிய கண்டத்தில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தனியார் வானிலை ஆய்வு நிலையமான ஸ்கைமெட் நிறுவனம் வௌியிட்ட புதிய ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின் பிரகாரம், இந்திய தலைநகரமான புதுடில்லி காற்று மாசினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள நகரமாக பதிவாகியுள்ளதுடன் இந்தப் பட்டியலில் 5ஆம் மற்றும் 9ஆம் இடங்களில் முறையே கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் தரப்படுத்தப்பட்டுள்ளன. புதுடில்லியின் காற்று மாசு செறிவுச் சுட்டி 527 ஆக பதிவாகியுள்ளதாகவும் இது ஆபத்தான நிலை எனவும் இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடில்லியில் அதிகரித்துள்ள காற்று மாசின் விளைவாக கடந்த செவ்வாய்க்கிழமை, 2 நாட்களுக்கு அங்குள்ள பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. புதிய ஆய்வறிக்கையின் பிரகாரம், காற்று மாசினால் பாதிக்கப்பட்டுள்ள நகரங்களின் பட்டியலில் இரண்டாம் மற்றும் நான்காம் இடங்களை முறையே பாகிஸ்தானின் லாகூர் மற்றும் கராச்சி ஆகிய நகரங்கள் தரப்படுத்தப்பட்டுள்ளன. உஸ்பெகிஸ்தானின் (TH) தஷ்கேன்ட் நகரம் இரண்டாமிடத்திலும் சீனாவின் சேன்கு மற்றும் (G) குவான்ஷூ ஆகிய நகரங்கள் ஆறாம் மற்றும் எட்டாம் இடங்களிலும் வியட்நாமின் ஹெனோய் ஏழாம் இடத்திலும் நேபாளத்தின் காத்மண்டு நகரம் பத்தாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.