வாக்களிப்பிற்கான ஆயத்தங்கள் முன்னெடுப்பு

வாக்களிப்பிற்கான ஆயத்தங்கள் முன்னெடுப்பு

by Staff Writer 15-11-2019 | 3:26 PM
Colombo (News 1st) மாவட்ட ரீதியில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையங்களிலிருந்து வாக்குப்பெட்டிகளும் உத்தியோகத்தர்களும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர். கொழும்பு மாவட்டத்தில் இம்முறை 16,70,403 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், இன்று காலை முதல் கொழும்பு மாவட்ட செயலகத்திலிருந்து வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கப்பட்டன. கம்பஹா - பத்தலகெதர தேசிய கல்வியியற்கல்லூரியிலிருந்து வாக்குப்பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள் இன்று காலை ஆரம்பமாகின. கம்பஹா மாவட்டத்தில் இம்முறை 17,51,892 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கண்டி மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள், பொல்கொல்ல திறந்த பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளன. கண்டி மாவட்டத்தில் 835 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இதற்கான வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுக்கள் உட்பட ஏனைய ஆவணங்கள் இன்று காலை முதல் விநியோகிக்கப்பட்டு வருவதாக கண்டி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி திஸ்ஸ கருணாரத்ன தெரிவித்தார். கண்டியில் 75 நிலையங்களிலிருந்து வாக்குப்பெட்டிகள் உள்ளிட்டவை விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இன்று காலை 8.30 முதல் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி சோமரத்ன விதானபத்திரன குறிப்பிட்டுள்ளார். காலி மாவட்டத்திலுள்ள 712 வாக்களிப்பு நிலையங்களுக்கு பாதுகாப்பு பிரிவினருடன் அதிகாரிகள் செல்வதாகவும் அவர் தெரிவித்தார். சுமூகமான முறையில் அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெறுவதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி சோமரத்ன விதான பத்திரன கூறினார். காலி மாவட்டத்தின் 10 தேர்தல் தொகுதிகளிலும 8,58,749 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.