நிஸங்க சேனாதிபதி தொடர்பான அறிக்கை கோரல் 

நிஸங்க சேனாதிபதியின் உடல் நிலை தொடர்பான அறிக்கையை நீதிமன்றம் கோரியுள்ளது

by Staff Writer 14-11-2019 | 6:02 PM
Colombo (News 1st) அவன்ற் கார்ட் மெரிடைம் சர்விசஸ் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிஸங்க சேனாதிபதியின் உடல் நிலை தொடர்பான சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை நீதிமன்றம் கோரியுள்ளது. சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையைப் பெற்று அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் வெலிக்கடை சிறைச்சாலையின் சிறை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளது. மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு அவன்ற் கார்ட் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதனூடாக அந்த நிறுவனத்திடம் 355 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றமை மற்றும் அதற்கு உதவி புரிந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ மற்றும் மேஜர் நிஸங்க சேனாதிபதி ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் சாட்சி விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் இன்று உத்தரவிட்டார். அன்றைய தினம் வழக்கின் 6 சாட்சியாளர்களையும் மன்றில் முன்னிலையாகுமாறு தெரிவித்து அறிவித்தல் அனுப்புவதற்கும் நீதிபதி உத்தரவிட்டார். இன்றைய வழக்கு விசாரணையின் போது, சிறைச்சாலை அதிகாரிகளூடாக மேஜர் நிஸங்க சேனாதிபதி மன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.