நாளை காலை முதல் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு

நாளை காலை முதல் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கை

by Staff Writer 14-11-2019 | 8:46 PM
Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 36 மணித்தியாலங்களுக்கும் குறைந்த காலப்பகுதியே எஞ்சியுள்ளது. ஒன்றரை மாதங்களுக்கும் அதிகக் காலம் இடம்பெற்ற பிரசார நடவடிக்கைகள் நேற்று (13) நள்ளிரவுடன் நிறைவடைந்ததுடன், வாக்களிப்பு நிலையங்களுக்கான ஆயத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 35 வேட்பாளர்கள் தமது கருத்துக்கள் மற்றும் கொள்கைகளை மக்களுக்கு முன்வைத்து, ஒன்றரை மாதங்களாக தமது ஆதரவாளர்களுடன் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வந்தனர். தேர்தல் சட்டத்திற்கமைய நேற்று நள்ளிரவிலிருந்து பரப்புரைகள் நிறுத்தப்பட்டதுடன், 48 மணித்தியால அமைதி நேரம் தற்போது நடைமுறையிலுள்ளது. ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி முதல் அனைத்து வாக்களிப்பு நிலையப் பகுதிகளிலும் ஒரு வேட்பாளருக்கு தலா ஒரு அலுவலகத்தை நடத்திச் செல்வதற்கும் மேலும் சில அலுவலகங்களை நடத்திச் செல்வதற்கும் அனுமதியளிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த அமைதி நேரப்பகுதியில் அவற்றை நடத்திச்செல்ல முடியாது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். இதற்கமைய, இன்று நள்ளிரவிலிருந்து ஒரு தேர்தல் தொகுதிக்கு ஒரு அலுவலகம் வீதமே நடத்திச்செல்ல முடியும். இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், அதிகாரிகள் குறைவாகவுள்ள பகுதிகளுக்கு அதிகாரிகளை அனுப்பும் நடவடிக்கை இன்று காலை ஆரம்பமானது. நாளை காலை முதல் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. வடக்கு, கிழக்கிலும் வாக்களிப்பு நிலையங்களில் பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.