தேர்தல் நடவடிக்கைகளுக்கு 2000 உத்தியோகத்தர்கள்

தேர்தல் நடவடிக்கைகளுக்கு கொழும்பிலிருந்து 2000 உத்தியோகத்தர்கள் நியமனம்

by Staff Writer 14-11-2019 | 7:00 PM
Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளுக்கு கொழும்பிலிருந்து சுமார் 2000 உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவர்களுள் தலைமை வாக்கெண்ணும் அதிகாரிகள் 1555 பேர் அடங்குவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டார். சில வாக்களிப்பு நிலையங்களுக்கு விசேட அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்லுதல் மற்றும் அதிகாரிகளை அனுப்பும் நடவடிக்கை நாளை (15) காலை முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. 2845 மத்திய நிலையங்கள் ஊடாக இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டது. இம்முறை தேர்தல் நடவடிக்கைகளுக்காக சுமார் மூன்று இலட்சம் அரச அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு 1,59,92,096 பேர் தகுதி பெற்றுள்ளனர். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளை மறுதினம் (16) காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மாலை 5 மணி வரை வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.