ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

by Staff Writer 14-11-2019 | 9:24 AM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர நியூஸ்பெஸ்ட்டுக்கு தௌிவுபடுத்தினார். ஜனாதிபதியைத் தெரிவு செய்தற்கான சட்டத்தின் பிரகாரம் 13 ஆம் திகதி நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரப் பணிகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதன்போது தெரிவித்துள்ளார். இந்தத் தடையானது, வாக்களிப்பு இடம்பெற்று தேர்தல் முடிவுகள் வௌியான பின்னர் ஒரு வாரத்திற்கு இந்த அமுலில் இருக்கும் எனவும் எவரேனும் இந்த சட்டத்தை மீறும் பட்சத்தில் அவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவுள்ளமை குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் வினவப்பட்டமைக்கு, வீடியோ கெமராக்கள் தமக்கு கிடைத்துள்ளதாகவும் சட்டங்களை மீறும் நபர்களை வீடியோ எடுப்பதற்காக இவை பயன்படுத்தப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார். அத்துடன் அந்த காணொளிகள் ஆதாரங்களாக நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படும் எனக் கூறிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடுபவர்கள் சோதனைக்குட்படவுள்ளதுடன், வாக்கெண்ணும் நிலையத்திற்கு செல்லும் ஒவ்வொரு நபரையும் வீடியோ எடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பிலும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர விளக்கமளித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களின் ஊடாக முன்னெடுக்கப்படும் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து நாம் தொடர்ந்தும் அவதானித்து வருகின்றோம். சட்டத்தை மீறும் செயற்பாடுகள் தொடர்பில் கண்டறியப்பட்டால், அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அதிகாரிகளிடம் அவை ஒப்படைக்கப்படும். அவ்வாறான சட்டவிரோதப் பதிவுகளை பதிவேற்றும் நபருக்கு எதிராகவும் அந்த பதிவினை பகிரும் நபர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகள், தமது பணியிடங்களுக்கு சென்றுள்ளனர். பொலிஸார் அர்ப்பணிப்புடன் இந்த காலங்களில் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் தமது வாக்குரிமையை சரியாகப் பயன்படுத்தி இந்த ஜனாதிபதித் தேர்தலை சுமூகமாகவும் சமாதானமாகவும் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நாங்கள் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். சட்டத்தை நிலைநாட்டுவதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தௌிவுபடுத்தியுள்ளார்.