நள்ளிரவுடன் பிரசார நடவடிக்கைகள் நிறைவு: சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் - தேசப்பிரிய எச்சரிக்கை

by Bella Dalima 13-11-2019 | 8:04 PM
Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறுகின்றது. இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று ஏற்பாடு செய்திருந்தார். பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் தேர்தல் சட்டம் மீறப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று நள்ளிரவு 12 மணி முதல் வர்த்தமானியிலுள்ள விதிமுறைகள் அமுலில் இருக்கும் எனவும் சில தனியார் ஊடகங்கள் சிறந்த வகையில் செயற்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார். தேர்தலின் பின்னர் ஊடகங்கள் தொடர்பில் ஆராய்ந்து வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் கூறினார். இந்த மௌன காலத்தில் பஞ்ச சீலம் அனுஷ்டிப்பதைப் போன்று இருக்க வேண்டும் என குறிப்பிட்ட தேர்தல்கள் ஆணையாளர், பிரசாரங்கள் நிறைவு பெற்ற பின்னர் சமூக வலைத்தளங்களில் உள்ள விளம்பரங்களை அகற்றுமாறு அறிவுறுத்தினார்.
கட்அவுட்-களை அகற்றுங்கள். நாளை காலை வரை அலுவலகங்களை வைத்திருக்க முடியும். ஒரு தொகுதியில் ஒரு அலுவலகத்தை வைத்திருக்க முடியும். 500 மீட்டருக்கு அருகில் வாக்களிப்பு நிலையம் ஒன்று இருந்தால் அலுவலகத்தை அகற்ற வேண்டும். அரச வாகனங்களை மறைத்து வைத்திருந்தால் 1 இலட்சம் ரூபா அபராதமும் 3 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்படும்.
என மஹிந்த தேசப்பிரிய மேலும் கூறினார்.