by Staff Writer 13-11-2019 | 8:08 AM
Colombo (News 1st) இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் சிவசேனாவுக்கு இடையே தீர்மானம் எட்டப்படாத நிலையில் சட்டப் பேரவையின் பதவிக் காலம் முடிவடைந்தது.
இதனால் முதல்வர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸ் விலகினார்.
இதனையடுத்து தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவை ஆட்சியமைக்குமாறு கோஷியாரிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
எனினும், தங்களுக்கு போதிய பெரும்பான்மை இல்லாதமையால் ஆட்சியமைக்கப் போவதில்லை என பாஜக அறிவித்திருந்தது.
இதனையடுத்து, இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதா என கூறுமாறு ஆளுநர் கோஷியாரி கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்க சிவசேனாவால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும், அந்த கட்சிக்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் முடிவடைந்த நிலையில் மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
இதனையடுத்து 3 கட்சிகளும் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும் தீர்வு எட்டப்படவில்லை.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்த ஆளுநர் கோஷியாரியால் பரிந்துரைக்கப்பட்டதுடன் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எட்டப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.