by Staff Writer 12-11-2019 | 8:24 AM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காத வாக்காளர்களுக்கு, தேர்தல் நடைபெறும் நாளிலும் வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறானவர்கள், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை தமது பிரதேச தபால் அலுவலகத்தில் எதிர்வரும் 16ஆம் திகதி மாலை 5 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும் என தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்போது தமது ஆள் அடையாளத்தை உறுதிசெய்வதற்காக தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை விநியோகிக்கும் பணி கடந்த 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இந்த உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை விநியோகிக்கும் விசேட தினமாக நவம்பர் மாதம் 3 ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்பட்டது.
அத்துடன் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நவம்பர் மாதம் 9 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
குறித்த காலப்பகுதிக்குள் 98 வீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டதாக தபால்மா அதிபர் கூறியுள்ளார்.