பாதுகாப்பு அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு

S.B.திசாநாயக்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களது விளக்கமறியல் நீடிப்பு

by Staff Writer 11-11-2019 | 7:03 PM
Colombo (News 1st) கினிகத்ஹேன - பொல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் S.B. திசாநாயக்கவின் பாதுகாப்புப் பிரிவின் 2 உத்தியோகத்தர்களும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் மாவட்ட நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரமுகர் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றிய 2 பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் இன்று அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டனர். கினிகத்ஹேன பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, இளைஞர்கள் சிலருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றபோது பொலிஸ் உத்தியோகத்தர்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது காயமடைந்த 2 இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.