தற்காலிக அடையாள அட்டை விநியோகக் காலம் நீடிப்பு

தற்காலிக அடையாள அட்டை விநியோகக் காலம் நீடிப்பு

by Staff Writer 10-11-2019 | 7:15 AM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டைகளை விநியோகிக்கும் காலம் நாளை மறுதினம் (12) வரை நீடிக்கப்பட்டுள்ளது. தற்காலிக அடையாள அட்டை விநியோகிக்கும் நடவடிக்கைகள் நேற்றைய தினத்துடன் நிறைவடையவிருந்தது. எனினும், நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் விநியோகக் காலத்தை நீடிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார். தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், முதியவர்களுக்கான அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை, மதகுருமார்களுக்கான அடையாள அட்டை ஆகிய ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டைகள் இல்லாதோருக்காக இந்தத் தற்காலிக அடையாள அட்டை விநியோகிக்கப்படுகின்றது. இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் தற்காலிக அட்டைகளில் சுமார் 3 இலட்சம் தற்காலிக அடையாள அட்கைள் நேற்றைய தினம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை நாளை (11) முதல் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன. கிராம உத்தியோகத்தரூடாக அடையாள அட்டைகள் விநியோகப்படும என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.