கோட்டாவின் பிரஜாவுரிமை தொடர்பில் அமெரிக்க தூதரகம்

கோட்டாபய ராஜபக்ஸவின் பிரஜாவுரிமை தொடர்பில் அமெரிக்க தூதரகம் பதில்

by Staff Writer 10-11-2019 | 3:25 PM
Colombo (News 1st) அமெரிக்க சட்டத்துக்கு அமைய விசா மற்றும் பிரஜாவுரிமை தொடர்பில் ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை தம்மால் வழங்கமுடியாது என, கோட்டாபய ராஜபக்ஸவின் பிரஜாவுரிமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு நியூஸ்பெஸ்ட் வினவியமைக்கு அமெரிக்க தூதரகம் பதிலளித்துள்ளது. கோட்டாபய ராஜபக்ஸ தொடர்பிலான 3 விடயங்கள் தொடர்பில் வினவி அமெரிக்க தூதரகத்துக்கு நாம் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தோம். அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கப்பட்டமை தொடர்பிலான ஆவணத்தில் கோட்டாபய ராஜபக்சவின் பெயர் உள்ளடங்கியிருந்ததா? ஹரின் பெர்னாண்டோ மற்றும் நாமல் ராஜபக்சவின் டுவிட்டர் பதிவுகளின் உண்மைத் தன்மை ? கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்தும் அமெரிக்க பிரஜையா இல்லையா ? உள்ளிட்ட 3 கேள்விகளை முன்னிறுத்தி அமெரிக்க தூதரகத்திடம் நாம் விளக்கம் கோரியிருந்தோம். ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் அமெரிக்க பிரஜாவுரிமை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டை ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நிராகரித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் அமெரிக்க பிரஜாவுரிமை தொடர்பில் தௌிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இது குறித்து தௌிவுபடுத்தினார். கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க பிரஜாவுரிமை இதுவரை மீளப்பெறப்படவில்லை என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க பிராஜாவுரிமை மீளப்பெறப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆவணத்தையும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் தமது பதிவை நீக்கியுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து தாம் கவலையடைவதாக அவர் கூறியுள்ளார்.