வறுமையிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அரச தொழில்வாய்ப்பு வழங்குவதாக கோட்டாபய வாக்குறுதி

by Bella Dalima 08-11-2019 | 9:58 PM
Colombo (News 1st) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் வெற்றியை உறுதிப்படுத்தும் கூட்டமொன்று பொலன்னறுவையில் இன்று நடைபெற்றது. பொலன்னறுவை - மன்னம்பிட்டிய மைதானத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பொலன்னறுவை மக்கள் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அமோக வரவேற்பளித்தனர். கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவளிக்கும் வகையில், இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க இக்கூட்டத்தில் கலந்துகொண்டார். நாட்டின் பாதுகாப்பிற்காக தாம் முன்வைத்துள்ள வேலைத்திட்டங்களைப் பார்த்தே வசந்த சேனாநாயக்க தம்முடன் இணைந்து கொண்டுள்ளதாக கோட்டாபய ராஜபக்ஸ தனது உரையில் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது,
குறைந்த வருமானம் பெறுவோர், சமுர்த்தி பெறுபவர்கள், சமுர்த்தி கிடைக்காதவர்கள், வருமானம் அற்றவர்கள், நாளாந்தம் உழைக்கும் தொழிலாளர்கள், அங்கவீனர்கள் மற்றும் நோயாளர்களுக்காக மாதந்தோறும் நிவாரணப் பொதியை இலவசமாக வழங்குவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். அரச நிறுவனங்களில், பாடசாலைகளில், உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களில் தற்போது சுமார் ஒரு இலட்சம் நிபுணத்துவம் அவசியமற்ற தொழில் வாய்ப்புக்கள் உள்ளன. அவற்றை கஷ்டப்படும் குடும்பங்களுக்கு தலா ஒரு தொழில்வாய்ப்பு வீதம் அரச தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.
என குறிப்பிட்டார்.