பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட இளைஞர் கைது 

பொதுஜன பெரமுன கூட்டத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பிய பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு: இளைஞர் கைது

by Staff Writer 08-11-2019 | 4:16 PM
Colombo (News 1st) கேகாலையில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டு பஸ்ஸில் திரும்பிக்கொண்டிருந்த யுவதி மீது அதே பஸ்ஸில் பயணித்தவரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் தொந்தரவு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை வழங்கிய முறைப்பாட்டையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். தாயும் மகளும் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் சந்திப்பு நிறைவுற்று திரும்பிக்கொண்டிருந்த பஸ்ஸில் பயணித்த ஒருவரால் பாலியல் தொந்தரவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஹெம்மாத்தகம , அலிபிட்டிய காட்டுப் பகுதியில் பஸ்ஸிற்கு பின்னால் அழைத்துச்சென்று சந்தேகநபரான இளைஞர் குறித்த யுவதியை பாலியல் தொந்தரவிற்குள்ளாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய ஹெம்மாத்தகம பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனைக்காக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.