அவசர அழைப்பு இலக்கம் முடக்கம்

அவசர அழைப்பு இலக்கம் முடக்கம்: புதிய ஜனநாயக முன்னணி தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

by Staff Writer 06-11-2019 | 9:09 PM
Colombo (News 1st) ஜனாதிபதி வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட சிலர் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தனர். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, பதில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, தனியார் ஊடகம் சுய கட்டுப்பாட்டைப் பெற்றுக்கொண்டு, இரு தரப்பினரையும் ஈடுபடுத்தி, அரசியல் கலந்துரையாடல்களை நடத்தும் போது, சுயாதீன தொலைக்காட்சி ஒரு தலைப்பட்சமாக ஏன் கலந்துரையாடல்களை நடத்துகின்றது என சட்டத்தரணி பிரேமநாத் தொலேவத்த கேள்வி எழுப்பினார். சில தனியார் ஊடகங்கள் வழிகாட்டல்களை மீறி ஒருதலைப்பட்சமாக செயற்படுவதாக பாரிய குற்றச்சாட்டு உள்ளது. எனினும், சுவர்ணவாஹினி மற்றும் சிரச ஊடக வலையமைப்பு பக்கசார்பின்றி, சம அளவு நேரம் வழங்குகிறது என சிஹல உறுமயவின் ஜனாதிபதி வேட்பாளர் சரத் மனமேந்திர குறிப்பிட்டார். இதேவேளை, புதிய ஜனநாயக முன்னணி அறிமுகப்படுத்திய அவசர அழைப்பு இலக்கம் முடக்கப்பட்டமை தொடர்பில் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
1326 என்ற அவசர அழைப்பு இலக்கத்தை புதிய ஜனநாயக முன்னணிக்கு வழங்குமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டது. நாட்டின் பிரஜைகள் தமது முறைப்பாடுகளை முன்வைக்கவும் தகவல்களை வழங்கவும் 1326 என்ற இலக்கத்தை வழங்குமாறு நேற்று தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடப்பட்டது. எனினும், அந்த உத்தரவை மீறும் வகையில் தொலைத்தொடர்புகள் ஒழங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஷாமல் ஜயதிலக்க, தான்தோன்றித்தனமாக சட்டவிரோதமாக வேறு ஒரு இலக்கத்தை வழங்குவது தொடர்பில் கதைத்தார். இந்த நிலை நீடித்தால் குறித்த நபர்கள் தொடர்பில் தகவல்களை வெளிக்கொணர நாம் எதிர்ப்பார்க்கின்றோம். தேர்தல்கள் ஆணைக்குழு 1326 என்ற இலக்கத்தை வழங்குமாறு கூறியும் அது வழங்கப்படாமை பாரதூரமான விடயமாகும்.
என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா குறிப்பிட்டார்.