Colombo (News 1st) அங்கவீனர்கள் தொடர்பிலான சர்வதேச கொள்கையை நடைமுறைப்படுத்துவதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ, ஹசலகவில் இன்று வாக்குறுதியளித்தார்.
கோட்டாபய ராஜபக்ஸவின் வெற்றியை உறுதிப்படுத்தும் பொதுக்கூட்டமொன்று ஹசலக நகரில் இன்று நடைபெற்றது.
உடுதும்பர தொகுதி அமைப்பாளர் லொஹான் ரத்வத்தே இந்த பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.
மஹிந்த ராஜபக்ஸ இக்கூட்டத்தில் உரையாற்றிய சந்தர்ப்பத்தில் அங்கிருந்த சிலர் கூச்சலிட்டமையை அடுத்து அவர் இவ்வாறு பதில் வழங்கினார்.
சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறுவதைக் கேளுங்கள். வெற்றிக்கூச்சலிட நேரமுள்ளது. தற்போது நிறுத்துவோம். எனக்கு பேசுவதற்கு இடமளியுங்கள். எனக்கு உரையாற்ற சந்தர்ப்பம் வழங்காவிடின், நீங்கள் மேடையில் ஏறி பேசுங்கள். இதனை கேட்பதற்கு சிலர் உள்ளனர். ஓர் இருவரே வெற்றிக்கூச்சலிடுகின்றனர். தயவு செய்து தற்போது நிறுத்துங்கள்
இங்கு மேலும் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஸ,
இந்த கொள்கை பிரகடனத்தில் சிங்களத்தில் ''ஏகிய'' எனவும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ''எக்சத்'' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சமஷ்டி முறை தொடர்பில் பேசுகின்றனர். சமஷ்டி தொடர்பில் பேசி இருதரப்பு மக்களையும் ஏமாற்றும் அரசியலமைப்பை கடந்த காலத்தில் ரணில் விக்ரமசிங்க நிராகரித்தார். நான் தயாரித்தவொன்று அல்ல. அவர் நிராகரித்தார். பாராளுமன்ற குழு தயாரித்த அறிக்கையில் அந்த கருத்து தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமந்திரனின் கருத்தும் உள்ளடக்கப்பட்ட அறிக்கையும் முன்வைக்கப்பட்டது. ஆங்கிலம் மற்றும் தமிழ் உரை உள்ளடக்கப்பட்டிருந்தது. அதனால் சஜித் பிரேமதாசவின் இரட்டை செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் அறிக்கையொன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களை ஒருபுறம் ஏமாற்றுகின்றார்கள். சிங்கள மக்களுக்கு அதனை மறைக்கின்றனர். தமிழ் மக்களுக்கு தமிழ் மொழியில் வெறோன்றைக் கூறி மோசடி செய்கின்றனர். மக்களுக்கு பொய் கூறி, ஏமாற்றி வாக்குகளைப் பெற முடியாது
என குறிப்பிட்டார்.
இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஸ கண்டி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டங்கள் சிலவற்றிலும் இன்று மாலை பங்கேற்றார்.
கலகெதர - ஹதரலியத்த பிரதேசத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திலும் கோட்டாபய ராஜபக்ஸவுடன் மஹிந்த ராஜபக்ஸவும் பங்கேற்றிருந்தார்.
இதன்போது, அரசாங்கத்தினால் சமையல் எரிவாயுவை விநியோகிக்க முடியவில்லை எனவும் விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை எனவும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.