ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு உடன்படிக்கை

ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பிற்கான உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்படவுள்ளது

by Staff Writer 31-10-2019 | 8:41 AM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட 15 கட்சிகள் இணைந்து உருவாக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு தொடர்பிலான உடன்படிக்கை இன்று (31) கைச்சாத்திடப்படவுள்ளது. கொழும்பு மன்ற கல்லூரியில் இன்று காலை 9.30 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் கூட்டமைப்பின் தலைவர்களாக செயற்படவுள்ளனர். கூட்டமைப்பின் தவிசாளர், உப தலைவர், பொதுச் செயலாளர், செயலாளர்கள் ஆகிய ஏனைய பதவிகளுக்கான உறுப்பினர்கள், தேர்தலின் பின்னர் நியமிக்கப்படவுள்ளனர். எதிர்வரும் பொதுத் தேர்தலில், ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு கதிரைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக் ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.