பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் தீ: 64 பேர் பலி

பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் தீ: 64 பேர் உயிரிழப்பு ; பாகிஸ்தானில் சம்பவம்

by Chandrasekaram Chandravadani 31-10-2019 | 12:46 PM
Colombo (News 1st) பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து ராவல்பிண்டி நோக்கி பயணித்த ரயிலில் திடீரென தீப்பிடித்ததில் குறைந்தது 64 பயணிகள் உயிரிழந்துள்ளனர். ரயிலில் பயணித்த பயணி ஒருவர் காலை உணவைத் தயாரித்தபோது எரிவாயு சிலிண்டர் வெடித்தமையே இந்தத் தீ விபத்துக்கான காரணம் என அந்நாட்டின் ரயில்வே துறை அமைச்சர் ஷெய்க் ரஷிட் அஹமட் தெரிவித்துள்ளார். வெடிப்புச் சம்பவத்தை அடுத்து குறைந்தது 3 பெட்டிகளுக்குத் தீ பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எரிந்துகொண்டிருந்த ரயிலிலிருந்து வௌியே பாய்வதற்கு முற்பட்டபோதே அதிகளவான பயணிகள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்களை மேற்கோள்காட்டி அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் 30 பேர் காயமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயிலில் சமைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் அடுப்பின் நெருப்பில் கலந்ததையடுத்து, இரண்டு அடுப்புகள் வெடித்துள்ளதாக ரயில்வே அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.