வேட்பாளர்களுக்கு ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்

வேட்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவுறுத்தல்

by Staff Writer 30-10-2019 | 9:19 AM
Colombo (News 1st) ஜனாதிபதி வேட்பாளர்களைப் பிரபல்யப்படுத்தும் வகையில் அரச நிறுவனங்கள் செயற்படக்கூடாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, வேட்பாளர்களை அறிவுறுத்தியுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று (29) ஜனாதிபதி வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் செயலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர்களைப் பிரபல்யப்படுத்தும் வகையில் அரச நிறுவனங்கள் செயற்படுவதாகக் கடந்த நாட்களில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர்களைப் பிரபல்யப்படுத்தும் வகையில் அரச நிறுவனங்கள் செயற்பட்டால் அதற்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்காக தபால் மூல வாக்களிப்பு நாளை (31) மற்றும் நாளை மறுதினங்களில் (01) இடம்பெறவுள்ளது. இதற்கான தபால் வாக்குச்சீட்டு உள்ளிட்ட பாதுகாப்புப் பொதி, வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனிடையே, ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வேண்டிய விதம் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய இதன்போது விளக்கமளித்துள்ளார்.