by Bella Dalima 30-10-2019 | 3:48 PM
Colombo (News 1st) சேவையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படை உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாக்களிப்பதைத் தவிர வேறு எந்தவொரு அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபட முடியாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது சேவையில் ஈடுபடும் மற்றும் ஓய்வு பெற்றுள்ள பாதுகாப்பு படையினர் அல்லது பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்களின் சேவைக்கான சீருடையுடன் கூடிய நிழற்படங்களை பயன்படுத்தி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதை முற்றாக தவிர்க்குமாறு இந்த அறிக்கையூடாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒத்தாசை புரிதல் தண்டனைக்குரிய குற்றம் எனவும் பாதுகாப்பு அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திரமும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு முப்படையினரும் பொலிஸாரும் பக்கசார்பின்றி செயற்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.