பாதுகாப்பை உறுதிப்படுத்த தேசிய திட்டம்

பாதுகாப்பை உறுதிப்படுத்த தேசிய திட்டம்: தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஹிஸ்புல்லா தெரிவிப்பு

by Staff Writer 29-10-2019 | 10:23 PM
Colombo (News 1st) இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் M.L.A.M. ஹிஸ்புல்லாவின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று (28) வௌியிடப்பட்டது. கொழும்பு மன்றக் கல்லூரியில் நேற்று பிற்பகல் 'நமது கனவு' எனும் ஹிஸ்புல்லாவின் தேர்தல் விஞ்ஞாபனம் வௌியிடப்பட்டது. தேசிய அளவில் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தி, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தேசிய திட்டத்தை நிறுவுவதாக M.L.A.M. ஹிஸ்புல்லா தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மை மக்களுக்கு எதிரான கலவரங்களை தடை செய்யும் வகையில், கடுமையான சட்டத்தை பாராளுமன்றத்தின் ஊடாக நிறுவுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாட்டிற்கான ஆணைக்குழு, அனைத்து சமூகத்தையும் சேர்ந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தரைப்படை, கடற்படை, விமானப்படை, சிவில் பொலிஸ் உயர் பாதுகாப்பு நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பள்ளிவாசல் இமாம்களுக்கான விசேட திட்டம், வக்பு சொத்துக்களுக்கான விசேட ஆணைக்குழு, அரபுக் கல்லூரிகளுக்கான பொதுவான பாடத்திட்டம், காணிப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்குவதாகவும் ஹிஸ்புல்லாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாய்ந்தமருது நகர சபை கோரிக்கை, கல்முனை வடக்கு பிரதேச சபை பிரச்சினை, கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலக கோரிக்கை, புத்தளம் அறுவாக்காட்டு குப்பை பிரச்சினை, அக்கரைப்பற்று பிரதேச சபைப் பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்குவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர் மற்றும் அதனை சூழவுள்ள பிரதேச மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.