ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு நேரம் நீடிப்பு

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு நேரத்தை நீடிக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

by Staff Writer 29-10-2019 | 4:15 PM
Colombo (News 1st) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் நீடிப்பதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை வாக்களிப்பு நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார். திருத்தப்பட்ட நேரம் குறிப்பிடப்பட்ட வர்த்தமானி இன்று நள்ளிரவு வௌியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். இன்று முற்பகல் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்தே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இம்முறை வாக்குச்சீட்டின் நீளம் அதிகரித்துள்ளதால், வாக்காளர் வாக்களிப்பதற்கு மேலதிக நேரம் தேவைப்படலாம் எனும் அனுமானத்தின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் காலை 7 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை வாக்களிப்பு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.