by Staff Writer 28-10-2019 | 3:06 PM
Colombo (News 1st) கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி M.Y.M. இஸதீன் முன்னிலையில் பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகளில் பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு நத்தார் ஆராதனையின்போது கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஷ்ணானந்த ராஜா, கஜன் மாமா என அழைக்கப்படும் கனநாயகம, முன்னாள் இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் எம். கலீல், முன்னாள் இராணுவ சிப்பாய் வினோத் என அழைக்கப்படும் மதுசிங்க ஆகியோர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.