பிரெக்ஸிட்டை பிற்போட EU தலைவர்கள் இணக்கம்

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை பிற்போட ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இணக்கம்

by Staff Writer 28-10-2019 | 7:47 PM
Colombo (News 1st) பிரெக்ஸிட் நடவடிக்கைகயை எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதி வரை பிற்போடுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவின் மூலம் இதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. பாராளுமன்றத்தில் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் காலக்கெடுவின் முன்னர் பிரித்தானியா விலகுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதியளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதி முன்கூட்டிய தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கும் நோக்கில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், முன்மொழிவு மீதான வாக்கெடுப்பிற்குத் தயாராகி வரும் நிலையில் பிரெக்ஸிட் கால நீடிப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி வழங்கியுள்ளது. ஸ்கொட்டிச் தேசிய கட்சி மற்றும் லிபரல் கட்சியினரும் எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதி தேர்தல் ஒன்றை நடத்துவது தொடர்பில் முன்மொழிந்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கான இறுதிக் காலக்கெடு எதிர்வரும் 31 ஆம் திகதியாகும். இந்நிலையில், பிரெக்ஸிட் ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் தோல்வியடைந்தமையால் கால நீடிப்பு கோரிக்கையை போரிஸ் ஜோன்சன் முன்வைத்திருந்தார். ஒப்பந்தம் இன்றியோ அல்லது ஒப்பந்தத்துடனோ ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா எதிர்வரும் 31 ஆம் திகதி விலகும் என போரிஸ் ஜோன்சன் ஏற்கனவே உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. காலநீடிப்பு வழங்கப்பட்டமை சிறந்தது எனவும் பிரித்தானியா தமக்கு என்ன தேவை என்பதில் தௌிவுபெற இதன்மூலம் நேரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் David Sassoli தெரிவித்துள்ளார்.