இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது நியூசிலாந்து

உலகக்கிண்ண ரக்பி: இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது நியூசிலாந்து

by Staff Writer 26-10-2019 | 9:29 PM
Colombo (News 1st) உலகக்கிண்ண ரக்பி தொடரில் நடப்பு சாம்பியனான நியூசிலாந்திற்கு இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு அற்றுப்போனது. இரண்டாவது தடவையாக ரக்பி உலகக்கிண்ணத்தை சுவீகரிக்கும் எதிர்பார்ப்புடன் இங்கிலாந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. ஜப்பானில் நடைபெறும் உலகக்கிண்ண ரக்பி தொடரின் முதலாவது அரையிறுதிப்போட்டி யொகஹாமா மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் நடப்பு சாம்பியனான நியூசிலாந்து, முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தை எதிர்கொண்டது. போட்டியின் ஆரம்பத்தில் தமது ரக்பி பாரம்பரியத்தை உலகிற்கு உணர்த்தும் ஹகா நடனத்தை நியூசிலாந்து வீரர்கள் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இரண்டாவது நிமிடத்தில் ட்ரையொன்றின் மூலம் புள்ளிகளை பெற ஆரம்பித்த இங்கிலாந்து முதல் பகுதியை 10 - 0 என வெற்றிகொண்டது. இதன்போது, இங்கிலாந்து வீரர்கள் ஒரு ட்ரை மற்றும் ஒரு கோலை பூர்த்தி செய்தனர். இரண்டாம் பகுதி ஆட்டம் விறுவிறுப்பிற்கு சற்றும் குறைவில்லாமல் நீடித்தது. நியூசிலாந்து வீரர்கள் ஆதிக்கத்துடன் விளையாடி புள்ளிகளை பெற முயற்சித்தாலும் அவர்களின் புள்ளி எண்ணிக்கை ஏழாக மட்டுப்படுத்தப்பட்டது. இங்கிலாந்து வீரர்கள் இரண்டாம் பகுதியில் சவாலுக்கு மத்தியில் 9 புள்ளிகளை சுவீகரித்தனர். இறுதியில் இந்தப் போட்டியில் 19- 7 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டிய இங்கிலாந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 2007 ஆம் ஆண்டிற்குப் பின்னரான உலகக்கிண்ணங்களில் நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு தகுதிபெறாத முதல் சந்தர்ப்பம் இதுவாகும். உலகக்கிண்ண ரக்பி தொடரில் இங்கிலாந்து கடந்த 2003 ஆம் ஆண்டு சாம்பியனாகியமையும் குறிப்பிடத்தக்கது.