13 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் தொடர்பில் ஆராய்வு 

by Bella Dalima 24-10-2019 | 10:16 PM
Colombo (News 1st) பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்ட 13 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் தொடர்பில் ஆராயும் மற்றுமொரு கூட்டம் கொழும்பில் இன்று நடைபெற்றது. எவ்வாறாயினும், குறித்த ஆவணத்தில் கைச்சாத்திட்ட இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதற்கமைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாக இருக்கக்கூடிய மூன்று கட்சிகளது பிரதிநிதிகள் மாத்திரமே இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். கொழும்பிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. ஐந்து தமிழ் கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும், சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இந்த 13 கோரிக்கைகள் தொடர்பிலான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.