எசெக்ஸில் லொறியிலிருந்து 39 சடலங்கள் மீட்பு

எசெக்ஸில் லொறியிலிருந்து 39 சடலங்கள் மீட்பு; விசாரணைகள் ஆரம்பம்

by Staff Writer 24-10-2019 | 10:10 AM
Colombo (News 1st) பிரித்தானியாவின் Essex மாநிலத்தில் குளிரூட்டப்பட்ட லொறி ஒன்றிலிருந்து 39 சடலங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பிரித்தானியாவின் Essex மாநிலத்தில் கொள்கலன் ஒன்றிலிருந்து நேற்று 39 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகத்தின் பேரில் 25 வயதான, கொள்கலன் கொண்டுவரப்பட்ட லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கொள்கலன் பல்கேரியாவிலிருந்து வந்ததாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது பெல்ஜியத்திலிருந்து வந்ததுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், குறித்த லொறி அயர்லாந்திலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது உறுதிப்படுத்தப்படுமாயின் அது தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அயர்லாந்துப் பிரதமர் தெரிவித்துள்ளார். இதனிடையே கடந்த 19 ஆம் திகதி குறித்த லொறி பிரித்தானியாவுக்குள் வந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.