மின்னேரியாவில் கோர விபத்து: ஒருவர் உயிரிழப்பு ; 60 பேர் காயம்

by Staff Writer 24-10-2019 | 7:12 AM
Colombo (News 1st) மின்னேரியா பகுதியில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 60 பேர் வரை காயமடைந்துள்ளனர். நேற்று (23) இரவு 11.30 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸுடன் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதி உயிரிழந்துள்ளதுடன் மேலும் 60 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை போக்குவரத்திற்கு சொந்தமான பஸ் மற்றொரு வாகனத்திற்கு வழி விடும்போது வேகமாக வந்த தனியார் பஸ் மோதியுள்ளது. விபத்து காரணமாக ஹபரணை - மட்டக்களப்பு வீதியில் சுமார் 2 மணித்தியாலங்கள் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.