பன்னிப்பிட்டியவில் இளைஞர் கொலை: 10 பேர் கைது

பன்னிப்பிட்டியவில் இளைஞர் கொலை: 10 பேர் கைது

by Bella Dalima 24-10-2019 | 8:02 PM
Colombo (News 1st) பன்னிப்பிட்டியவில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த கொலை இன்று அதிகாலை 12.20 மணியளவில் தெபானம - பன்னிப்பிட்டியவிலுள்ள தனியார் நிறுவனத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் தெபானம - பொரளை வீதி பகுதியில் வசிக்கும் 18 வயதான இளைஞர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் ​மேற்கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட இளைஞர் தனது நண்பரின் அழைப்பிற்கிணங்க குறித்த பகுதிக்கு சென்றுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரது நண்பர் அதற்கு முன்னரே குறித்த பகுதிக்கு சென்றுள்ளதுடன், இதன்போது இனந்தெரியாத சிலரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்த இளைஞர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மகரகம பொலிஸார் குறித்த கொலை தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தலைமையக பொலிஸார் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.