23 நிறுவனங்கள் குறித்த கோப் குழுவின் அறிக்கை 

23 நிறுவனங்கள் குறித்த கோப் குழு அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

by Staff Writer 23-10-2019 | 8:00 AM
Colombo (News 1st) 23 நிறுவனங்கள் தொடர்பான விசாரணைகள் அடங்கிய கோப் (Cope) குழு அறிக்கை இன்று (23) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 2018ஆம் ஆண்டிற்கு அமைய இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கோப் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை 23 நிறுவனங்கள் தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகள் குறித்த அறிக்கையில் உள்ளடங்குவதாக அவர் கூறியுள்ளார். குறிப்பாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை, இலங்கை பொறியியலாளர் சங்கம், பெற்றோலிய வளத்துறை, துறைமுகம், லங்கா வைத்தியசாலை உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்பிலேயே அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குழுவின் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று முற்பகல் சமர்ப்பிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். மும்மொழிகளிலும் குறித்த அறிக்கை மொழிபெயர்க்கப்பட்டதால், அறிக்கையை சமர்ப்பிக்க காலதாமதமானதாக பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.