பிரெக்ஸிட் ஒப்பந்தம் தாமதமானால் பொதுத் தேர்தல்? 

பிரெக்ஸிட் ஒப்பந்தம் தாமதமானால் பொதுத் தேர்தலுக்கு பிரதமர் அழைப்பு

by Staff Writer 23-10-2019 | 1:42 PM
Colombo (News 1st) பிரெக்ஸிட் நடவடிக்கையை எதிர்வரும் ஜனவரி மாதம் வரையில் காலம் தாழ்த்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்தால் பிரித்தானிய பிரதமர் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களில் கைச்சாத்திட மேற்கொள்ளப்பட்ட திட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் மறுதலித்ததைத் தொடர்ந்து போரிஸ் ஜோன்சன் அந்த நடவடிக்கையை இரத்து செய்தார். பிரெக்ஸிட் நடவடிக்கையை மேலும் காலம் தாழ்த்துவதா இல்லையா என்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஒக்டோபர் 31ஆம் திகதி தீர்மானிக்கவுள்ளனர். இதற்கமைய, போரிஸ் ஜோன்சன் தமது பிரெக்ஸிட் ஒப்பந்தம் மீதான இறுதி வாக்கெடுப்பை எதிர்வரும் சனிக்கிழமை நடத்தவுள்ளார். பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பிலான இறுதி விதிமுறைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக பாராளுமன்றம் அடுத்த சனிக்கிழமை கூடவுள்ளது. எவ்வாறாயினும், இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பிரதமர் போரிஸ் ஜொன்சனின் வடக்கு அயர்லாந்து ஆதரவாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். பிரெக்ஸிட் நடவடிக்கையை மீண்டும் தாமதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரும் நிலையை உருவாக்காத வண்ணம், போரிஸ் ஜோன்சனின் ஒப்பந்தத்துக்கு தௌிவான ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் எதிர்வரும் சனிக்கிழமை வாக்கெடுப்பொன்றும் நடத்தப்படவுள்ளது. பிரித்தானியாவை அரசியல் குழப்பநிலைக்கு உட்படுத்தி நாட்டை பிளவுபடுத்திய பிரெக்ஸிட் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான காலம் இதுவெனவும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.