மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

தொடரும் மழை; மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

by Staff Writer 23-10-2019 | 7:40 AM
Colombo (News 1st) நாட்டில் இன்றும் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. நிலவும் மழையுடனான வானிலையால் இரத்தினபுரி, கேகாலை, பதுளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (23) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பலத்த மழையினால் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு உரித்தான சில நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மீ ஓயா, தெதுரு ஓயா, கலா ஓயா போன்ற நீர்த்தேக்கங்களை அண்மித்துள்ள நீர்த்தேக்கங்கள் வான் பாய்வதாக திணைக்களத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மஞ்சுள சமரகோன் தெரிவித்துள்ளார். இதன்பிரகாரம் இராஜாங்கனை, தப்போவ, அத்தனகல, பாலு கடவல ஆகிய நீர்த்தேக்கங்களும் தெதுரு ஓயா, பத்தலகொட மற்றும் கிம்புல்வானா ஓயா ஆகிய நீர்த்தேக்கங்களும் வான் பாய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மஹவெலிக்கு உரித்தான பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக மஹவெலி அதிகார சபை தெரிவித்துள்ளது.